நவமீன்
தூக்கிலிடும் கயிறொத்து தொங்கியதோர் தூண்டில்ஊனை
ஆக்கிற்று தன்னுணவாய் அகன்றவாய்ப் பெருங்கெண்டை.
வாக்கின்றி துடித்தலறி வாழ்க்கையற்று மரித்ததனை
நோக்கியவோர் சிறுகெண்டை நுன்னறிவு பெற்றதுவே!
மீண்டுமங்கே தூண்டில்ஊனும் மிகமணமாய்த் தொங்கிடவே
வாண்டுமீன் தன்னறிவில் வந்திட்ட குறுகுறுப்பால்
வேண்டுமந்த ஊணென்ற வேகமிகு ஆசைகளே
ஆண்டததன் சிற்றறிவை; ஆதலினால் துணிந்ததுவே!
ஆனாலும்,
படிப்பினையை பெருங்கெண்டை தந்ததனால் மெல்லெனவே
கடித்தாலும் கடிநடுவே கடுமிரும்பைக் கடித்திட்டு,
துடிக்கவைக்கும் பல்வலியால் துவண்டந்தச் சிறுகெண்டை.
படிப்பினைகள் கிடைத்தற்றே! பலவிதமாய்க் கிடைத்தற்றே!!
உள்ளிருக்கும் கடுமைவரை ஊடாமல் உண்டாலும்
உள்ளறிவின் கவனமற்ற ஒருநாளில் முனைகவ்வ,
முள்முனை மறைமுள்ளும் பூட்டியது வாய்குள்ளே;
துள்ளியதால் மேன்மேலும் தூர்ந்தது விடுதலையும்.
இதன்பிறகு
தக்கையின் தவிப்பால் சிக்கியது மீனென்று
அக்கயிறு இழுத்தோன் ஆத்திரம் கொண்டான்;
இச்சிறு மீனுமோ என்முள் புகுமென
பிய்த்தெறிந்து வீசினன் தன்முள் விடுக்கவே!
பிழைத்தனம்! பிறந்தனம்!! மீனாக மீண்டும்,
பிழையினி செய்யோம், இலவசம் இவ்வாழ்க்கை
சவத்தில் பிறழ்ந்த சிறுகெண்டை நவின்றது.
கவர்ந்திடும் இலவசம் கொண்டது அபாயம்
தவறுகள் பலசெய வந்திடும் உபாயம்
நவமென நவமென நடந்திடும் வாழ்வு
துவங்கிடு இன்றே தொடங்கிடு இன்றே!
(இப்பாடல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்ற பாவகையில் முயன்றிருக்கிறேன். இலக்கணம் சரியா என்று பெரியோரைக் கேட்க வேண்டும்.)
(தூண்டில் என்ற சிறுகதை ,ஓகை பதிவில் இருகிறது. அதன் கதையே இக்கவிதை)