பா

என் மரபுக் கவிதைகள்

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

Monday, July 16, 2007

குழலிப் பாதை

இரண்டாயிரத்து இருபது என்ற தலைப்பில் ஒரு மடற்குழுவில் நான் எழுதிய மரபுக் கவிதை.

அன்புடன்,
நடராஜன்.

* * * * *


குழலிப் பாதை


===============


இருபதுஇருபது என்றவோர் அருங்கருத்தில் கவிசெயவே
பெருமுயற்சி செய்தநான் பெற்றதெல்லாம் சுழியேதான்.
நனவுலகில் முடியாத நடப்பையெலாம் வெகுசுளுவாய்
கனவுலகில் முடித்துவிட்டுக் களித்திருப்பது என்வழியே!

கைவந்த இவ்வழியை கைகொள்ள இப்போதும்
மெய்சாய்த்துக் கண்ணயர்ந்து பொய்நனவில் ஆழ்ந்துவிட்டேன்.

கடற்கரை நிலையமொன்றில் கவின்மிகக் காத்திருந்த
தொடர்வண்டி உள்ளிருந்தேன் தொடங்குநிலை பயணத்தில்
கீழ்க்கரையின் வெள்ளலைகள் கிளரோசை தொடர்ந்தொலிக்க
ஆழ்கடலின் மேலாக அயப்பாதை சென்றதுவே!

(அயப்பாதை = இருப்புப்பாதை)

மாகடல்மேல் கூண்டிட்டு மாகால்கள் தாங்குகின்ற
நீளரவின் என்புஒத்து நீண்டுசெல்லும் கடற்பாலம்
எங்கே(ஏ)கும் இப்பாதை எதிர்இருக்கை பயணிசொன்னார்
(இ)லங்கையின் வடமுனையாம் காங்கேசன் துறையென்றார்.

(நீளரவின் என்பொத்து = நீண்ட பாம்பின் எலும்புக்கூடு போன்று)

இருபதுஇரு நூறாய்க்காண் திறன்பெற்றேன் கனவுலகில்
கருப்பெழுத்தில் தூரத்தில் கட்டமஞ்சள் பலகையொன்றில்
என்தமிழில் அதனடியில் இந்தியத்தில் இங்கிலத்தில்
சொன்னதுஇவ்வூர் குழகேசர் வாழ் கோடிக்கரைஎன்று.

(இந்தியம்=இந்தி, இங்கிலம்=ஆங்கிலம்)

பாராத உலகிலுமே பார்க்கவும் இயலாத
கார்ஆர்ந்த குழலழகி கல்கிமகள் பூங்குழலி
ஏர்ஆர்ந்த கன்னியவள் என்மனம்கொள் கள்ளியவள்
நீராடி நிலமாடி திளைத்திருந்த இடமிதுவே!

தென்கரையின் கீழ்க்கரையின் தரங்கொலிகள் தன்ஒலியாய்,
வென்றுநிற்பாள் ஆளுமையால் வெகுஆழக் கடற்பாதை.
மாகடலின் நீர்த்தளும்பல் தாலாட்டாய் கொண்டவளாம்
வேகமிகு வீரமிகு நெய்தல்மண் பெண்ணரசி.

(நெய்தல்=கடலும் கடல் சார்ந்த இடமும்)

அவள்சென்ற இப்பாதை இதுகுழலிப் பாதை

அதனடியில் கடலாழம் பதிமூன்று மீட்டராகும்
அதிர்கின்ற பூமியையும் ஆழிப் பேரலையையும்
எதிர்கொள்ளும் வகையான ஏற்றமிகு கட்டுமானம்!

(அதிர்கின்ற பூமி=பூகம்பம், ஆழிப் பேரலை=சுனாமி)

கடல்மேலே பலமீட்டர் உயர்நின்றுக் குறுக்கிட்டுத்

தடமேகும் நாவாய்க்காய் திறப்பெல்லாம் செய்துவைத்தார்
பணிசெய்த பொறியரின் பாங்கினை வியந்துநிற்க
இனியதோர் சங்கொலியில் இப்பயணம் தொடங்கிற்று.

(நாவாய்=கப்பல், பொறியர்= கட்டிடப் பொறியாளர்கள்)

சடுதியில் செலுத்திய சகடைகள் உயிர்த்தன

கடல்நடு கூண்டினில் காட்சிகள் விரிந்தன
தூரத்துக் கலங்கள் துண்டுகளாய்த் தோன்ற,
ஈரமாய்க் கயற்கொத்து அரிதாய்க் காண,
ஏகாந்தப் பறவை என்னை மயக்க,
ஆகாய நீலம் ஆழ்மனம் துய்க்க,
அரைமணிப் பயணம் அடைந்தது துறையும்
வரைநடு தீவின் வடமுனை வந்தேன்.
ஏலேல சிங்கனும் மாறனும் சோழனும்
மார்தட்டிப் பொருது மாவீரம் சொறிந்த,
கேதீசரனொடு கதிர்காமன் அருள்செயும்,
ஓதி வரங்கொள் ஓர்அரக்கன் வதம்செய
மாலவன் கால்வைத்த இலங்கை மண்ணில்

மாதவப் பயனாய் கால்பட மகிழ்ந்தேன்.
ஒற்றையாய் குழலி அன்றுசெய்த வேலை
கற்றைப் பொறியரின் இற்றை சாதனை.
நானுமோர் பொறியன் நன்றாய் சிலிர்த்தேன்
காணுகின்ற கனவும் சிலிர்ப்பால் சிதைய
இரண்டாயிரத்தேழுக்குள் வந்தேன்
இரண்டாயிரத்திருபதிலே எம்மனார்
சிறப்புக்கு இஃதொரு பருக்கை பதமே!

(கயற்கொத்து=மீன்கூட்டம்)
(வரை=மலை, வடமுனை=வடக்கு முனை)
(மாறன்=பாண்டியன்)
(ஓதிவரங்கொள்ஓர்அரக்கன்=ராவணன்)

**** **** ****
ஓகை நடராஜன்

**** **** ****

1 Comments:

Blogger அகரம் அமுதா said...

எத்துணை அழகிய சொற்சிலம்பம். வியந்து நிற்கிறேன். நிறைய செழுந்தமிழ்ச் சொற்களைக் கையாண்டு வியக்கவைக்கும் அளவிற்குப் பாவடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

July 10, 2008 5:01 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது