பா

என் மரபுக் கவிதைகள்

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

Friday, October 20, 2006

வெல்வெல் சூழல்

*
நேரிசை ஆசிரியப்பா:

என்பெயர் கூவம் சென்னையில் துர்மணத்
துன்பம் பரப்பி, தூய்மை கெடுத்து,
நோய்கள் கொடுக்கும் நுன்னுயிர் வளர்த்து,
பாய்புனல் இல்லா தேங்குநீர் தன்னில்
கொசுக்களின் பண்ணைக் கொள்ளையாய் செய்து,
அசுத்த குப்பைகட்கு அடைக்கல மாகி,
கொலைப்பிணம் தள்ளிடும் கொல்லை யுமாகி,
புலையரின் தீச்செயல் புகலிட மும்ஆகி,
தொலைவின் வந்து அலைகடல் சேராது
பாழாய்ப் போன வாழா வெட்டிநான்.

சென்னை நகரீர், புறநகர் மக்காள்,
என்சொல் கேட்பீர் சற்றே செவிமடுப்பீர்!
விந்தை பலசெயும் விடுதலை எனக்களிப்பீர்!
சிந்தயில் கொள்வீர் சீர்மிகு சென்னையீர்,
நுந்திறன் நீர்அறியீர் நும்மையாம் அறிந்ததால்
விளம்புவன் யானொரு வெல்வெல் சூழல்.

விடுதலை அளிப்பீர்! விடுதலை பெறுவீர்!
கெடுதலைக் கழிவுகள் கலத்தலைத் தடுப்பீர்!
என்னுள் கலக்கும் எண்ணரும் விடங்கள்
இன்னல் மிகுத்திடும் மண்வளம் குறைத்திடும்.
இவைகட் கெனவே தனிவழி செய்வீர்!

மலையிடைப் பிறந்தோ, மாமடு பிறந்தோ,
அலைகடல் அடையவே ஆண்டவன் படைத்தான்.
முன்னூற் றாண்டில் இயற்கையில் மாறினேன்
தன்னிலை தவழ்ந்தே தரங்கம் அடைந்திலேன்.
இந்நூற் றாண்டின் ஈடிலா மாந்தர்நீர்
எந்நோற் றீரோ எல்லாம் அறிந்தீர்
இதற்கொரு நல்வழி இயற்றுவீர்
வியத்தகு வளம்வருங் காலம் பெறுவொமே!

***

Sunday, October 15, 2006

வஞ்சித்துறை

*


- - - - - ஏராளமான மரபுக் கவிதை வகைகளில் ஒன்றான வஞ்சித்துறை என்னும் வகையில் நான் செய்த ஒரு கவிதை.

- - - - - பணித்த செயல்கள்
- - - - - இணைத்த துயர்கள்
- - - - - பிணைத்த உலகில்
- - - - - அணைப்பதும் அன்பே!

- - - - - காண்பதற்கு எளிதாக இருக்கும் இக்கவிதை வடிவின் இலக்கணமும் மிக எளியது.

- - - - - இலக்கணம்: அளவொத்த குறளடிகள் நான்கினால் தனித்து வருவது.

- - - - - அவ்வளவே!

- - - - - அளவொத்து வருதல் என்றால் நான்கு அடிகளிலும் ஒத்த சீர்கள் ஒத்த ஓசை அளவினதாய் இருக்க வேண்டும். குறளடி என்றால் இரண்டே சீர்கள் கொண்ட அடி. மரபுக் கவிதைகளுக்கே உரித்தான ஓசை நயமும் எதுகை மோனைகளும் இருக்க வேண்டும். நான் பார்த்த பழைய பாடல்கள் நான்கு அடிகளிலும் ஒரே எதுகை வருமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு எடுத்துக் காட்டு:

- - - - - கண்ணன் கழலினை
- - - - - நண்ணும் மனமுடையீர்
- - - - - எண்ணும் திருநாமம்
- - - - - திண்ணம் நாரணமே! - நம்மாழ்வார் பாடல்.

- - - - - முதலில் நான் சொல்லியிருக்கும் பாடல் இவ்வகையில் நான் எழுதியதில் இரண்டாவதாகும். முதலாவது:

- - - - - வஞ்சித்துறை எழுதிட
- - - - - பிஞ்சுக்கவி முயன்றால்
- - - - - மிஞ்சிட்ட செயலாமோ!
- - - - - கிஞ்சித்தும் அஃதிலையே!!

என்னை வஞ்சித்துறையில் எழுதச் சொல்லி ஷைலஜா அவர்கள் எழுதிய கவிதை:

- - - - - பண்ணிய பாவம்போம்
- - - - - நண்ணிடும் நன்மைகள்
- - - - - அண்ணல் அரங்கனை
- - - - - எண்ணுக என்றுமே!

ஷைலஜா அவர்களுக்கு நன்றி.

இப்போது ஒன்று செய்தேன்.

- - - - - தனியே நொந்தேன்
- - - - - எனையே மறந்தேன்
- - - - - இனியே என்செய
- - - - - குனியா வந்ததே!

நீங்களும் முயன்று பாருங்கள். இங்கே உங்கள் கவிதைகளைக் குவியுங்கள்.


*

Saturday, October 07, 2006

வண்ணத்தி நன்றி...

*
வண்ணத்தி நன்றி...

என்னின் மகரந்தம் எடுத்துயார் வருவார்
பொன்வண்டே உனக்கே பொறுத்தேன் நீயோ
அஞ்சிரைத் தும்பி அடடா நீயோ
கங்குல் நிறத்துக் கருவண்டே நீயோ
இங்கும் மதுவுண்ட என்தேனீ நீயோ
இப்போது வந்தனை வண்ணத்தி நீயோ
தப்பாது கொணர்ந்தாய் தயைசெய்தாய் நீயே
எண்ணி மகரந்தம் எடுத்தே வந்தனை
மண்ணில் சூம்பிநான் மடியா வண்ணம்
என்னின் மகரந்தப் பயணம் தந்தனை
சூலுறச் செய்தனை பாலுறச் செய்தனை
காய்சுமப்பேன் நானினி காணே! இன்றினி
தாய்நான் நவின்றேன் தகைந்த நன்றியே!




*

சொல்லத் துடிக்கிறது நிலவு

*


ஒரு அறிவியல் புனைகதைக் கவிதை.



_ _ _ _ பெருவின்கல் ஒன்று புவியை நெருங்க
_ _ _ _ நவிலத் துடித்த நிலா.



*

அமாவாசை

*


அமாவாசை
===========

எங்கே சென்றனை நிலவே?
----- இன்றும் ஒருசிறு விடுப்பா?
மங்கிய ஒளியினில் புதிதாய்
----- மறுநாள் முடிந்ததும் வருவாய்
தங்கக் கம்பிபோல் சிறிதாய்
----- தருவாய் தரிசனம் மெலிதாய்
திங்கள் குணமெனத் தெரிந்தும்
----- திரும்ப வந்தது வியப்பே!



இன்று கண்டிட வேண்டும்
----- இரவும் ஒளியுடன் வேண்டும்
சென்று தேடிட வேண்டும்
----- சேர்ந்த இடமதும் ஏதோ?
தொன்று தொடர்ந்திடும் ஜாலம்
----- தொலையும் உத்தியை நானும்
வென்ற மனிதனாய் மாற
----- வித்தை கற்றிட வேண்டும்.


*

வெண்மையே வாணீ

*


கருமையின் பிடியைக் கடந்தயென் அறிவு
பெருவான் நீலமாய் பெற்றது நிர்மலம்
பச்சை முளைகளாய் மஞ்சள்பூ ஞானமாய்
வித்தைபல என்னுள் விதைத்தாய் வாணீ
நிறங்களின் ஒளியெலாம் நிறைத்த வெண்மையே
இறுதிச் செம்மைக்கும் இட்டுச் செல்நீயே!


(எல்லா நிறங்களின் கலவையே வெள்ளை நிறம். கருமையான அறியாமை நீக்கி, தெளிவின் நீலம் பரப்பி, பசுமையாய் அறிவு முளைவிடச் செய்து, அதன் பலனான மங்கலத்தைப் பெறச் செய்த வாணியே, நீயே எல்லா நிறங்களையும் உள் வைத்திருக்கும் வெண்மை. நான் பெறாத செம்மைக்கும் நீயே என்னை இட்டுச்செல்வாயாக! - இந்தக் கருத்தைத்தான் அகவலில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.)



*

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது